தமிழ்த்தாய் வாழ்த்து பாடாவிட்டால் மேடையில் அமர மாட்டோம்..! - காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி எச்சரிக்கை...!
If there dont sing Tamil Mother Day greetings we wont sit on stage Congress MP Manickam Thakur stern warning
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காது என அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

இன்று திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மாணிக்க மற்றும் வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். துணை ஜனாதிபதியை தமிழக காங்கிரஸ் சார்பில் பெருமையுடன் வரவேற்கிறோம்.
அரசு மரபின்படி, துணை ஜனாதிபதியை வரவேற்பது முதல், நிகழ்ச்சிகளில் அவருடன் இருப்பது, தேவையான உபசரிப்புகளை கவனிப்பது, பின்னர் வழியனுப்புவது வரை அவருக்கு உரிய மரியாதையுடன் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதனை தமிழக அரசு நியமித்துள்ளது.
அதேவேளையில், துணை ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி நிகழ்ச்சி தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அதன் பின்னரே பிற பாடல்கள் இசைக்கப்பட வேண்டும்.இந்த நடைமுறையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால், அந்த நிகழ்ச்சிகளின் மேடையில் தமிழக காங்கிரஸ் சார்ந்த அமைச்சர் அமரமாட்டார்.
மேலும், அந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் அமைச்சர் பங்கேற்க மாட்டார் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள மிக உயரிய அரசுப் பொறுப்புகளில் ஒன்றான இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி பதவிக்கு வழங்க வேண்டிய முழுமையான மரியாதையை தமிழக காங்கிரஸ் ஒருபோதும் குறைக்காது.
அதே நேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பையும், தமிழர்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்த அதன் பெருமையையும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதும், அரசின் நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு" என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
English Summary
If there dont sing Tamil Mother Day greetings we wont sit on stage Congress MP Manickam Thakur stern warning