சட்டசபையில் வரலாற்று மாற்றம்...! எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு சபாநாயகர் பொறுப்பு...! த.வெ.க. அரசின் புதிய நடைமுறை...!
Historical change Assembly Speaker responsible opposition MLA New procedure Tvk government
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாத நேரத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை வழிநடத்தியது கவனம் பெற்றது.பொதுவாக சட்டசபை நடவடிக்கைகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவரது இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார்.

இருவரும் அவையில் இல்லாத சூழ்நிலையில், மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகர் பொறுப்பை ஏற்று அவையை நடத்துவது வழக்கம்.புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, சட்டசபை மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் ஆளுங்கட்சியினருடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மாற்றுத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், த.வெ.க. அரசு அந்த நடைமுறையை மாற்றியமைத்து, எதிர்க்கட்சியினருக்கும் மாற்றுத் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளது.
அதன் வெளிப்பாடாக, சட்டசபையின் நிறைவு நாளான இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் அவையில் இல்லாத நேரத்தில், மாற்றுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை நடத்தினார்.
அவையில் உறுப்பினராக இருந்தபோது பல்வேறு விவாதங்களில் காரசாரமாக பங்கேற்ற தளவாய் சுந்தரம், சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தனது கட்சி நிலைப்பாட்டை ஒதுக்கிவைத்து, அவை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுநிலையுடன் நடவடிக்கைகளை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
English Summary
Historical change Assembly Speaker responsible opposition MLA New procedure Tvk government