எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.98 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு; ஓய்வுபெற்ற பொதுத் துறை செயலர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders retired Public Sector Secretary to appear in Rs 98 crore tender scam case against SP Velumani
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில், அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன் போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததாவது; இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்ததாகவும், இது சம்பந்தமாக கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி விளக்கம் அளித்து, பொதுத் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை எனத் நீதிபதி தெரிவித்தார். அத்துடன், கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலாளரிடம் இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் எனவும், அப்போது பொதுத் துறை செயலாளராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர், ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து தற்போது பொதுத்துறை செயலாளரும், இதுசம்பந்தமாக விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதோடு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 03-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்க முடியாது எனத் நீதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், கோப்புகள் முடங்கியுள்ளன எனவும், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
High Court orders retired Public Sector Secretary to appear in Rs 98 crore tender scam case against SP Velumani