பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்!
High Court order construction work Pallikaranai swamp land
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் நடைபெற்று வந்த குடியிருப்பு வளாக கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 1,400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ வழங்கிய அனுமதி சட்டவிரோதம் என்றும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் வரை எந்தக் கட்டுமானமும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
விசாரணையின் போது நீதிபதி, “உச்ச நீதிமன்றமும் பசுமைத் தீர்ப்பாயமும் சதுப்பு நிலங்களில் கட்டுமானம் தடை விதித்திருக்கையில், சிஎம்டிஏ எவ்வாறு அனுமதி வழங்கியது?” என கேள்வி எழுப்பினார். இதற்கு அரசுத் தரப்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அனுமதி கிடைத்ததால் கட்டுமான அனுமதி வழங்கியதாகவும், சதுப்பு நில எல்லையைத் தீர்மானிக்கும் ஆய்வு 2 வாரங்களில் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள் நவம்பர் 12க்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும், அதுவரை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் எந்தக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்தது.
மழைநீர் வடிகால் வழியாக செயல்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சென்னையை வெள்ளத்திலிருந்து காக்கும் முக்கிய இயற்கை தடுப்பாகும். இதை பாதுகாப்பது நகரின் நீர்வள சமநிலைக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் அவசியமானது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதிமுக வழக்குரைஞர் பிரஸ்நேவ் தாக்கல் செய்த மனுவில், “குப்பை கொட்டுதல் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களால் சதுப்பு நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் சேதப்படுத்தும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
மாநில அரசு சார்பில், “அந்த பகுதி ராம்சார் தலம் அல்ல” என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்தது.
English Summary
High Court order construction work Pallikaranai swamp land