திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீப தூணே இல்லை - உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வாதம்!   - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக, கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 12) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் மீண்டும் தொடங்கியது.

இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு:
தனி நீதிபதி உத்தரவின்படி டிசம்பர் 1 மற்றும் 4ஆம் தேதிகளில் தீபம் ஏற்றப்படாததால், கோர்ட் அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்ட சூழலில், இந்த விவகாரம் மேல்முறையீட்டுக்கு வந்தது. இன்று விசாரணை தொடங்கியபோது, இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்ட வக்கீல்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். "அனைவரும் அமைதியைக் காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசின் வாதம்:
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் வாதாடுகையில்:

வழக்கமான இடம்: பல ஆண்டுகளாகத் தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது.

பொதுநல வழக்கு அல்ல: கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில்லாத தனிநபரின் மனுவை, பொதுநல மனுவைப் போல் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்க இயலாது.

சட்டம்-ஒழுங்கு: சட்டம்-ஒழுங்கைக் காக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எல்லைக் கல்: தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல, அது சர்வே அளவு தூணாக இருக்கலாம். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court Madurai Bench thiruparankundram issue TN Government 


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->