திமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்: முன்னாள் அமைச்சர் ரகுபதி - முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் இடையே மேடையில் கடும் வாக்குவாதம்!
Heated Spat Between DMK Leaders Over Aranthangi Seat Allocation Former Minister Raghupathy and ExMLA Udayam Shanmugam Clash on Stage
திமுக உட்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், எளிதில் வெற்றிபெற வேண்டிய அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆவேசமாகப் பேசியது மேடையில் இருந்த நிர்வாகிகளிடையே பெரும் வாக்குவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
கூட்டத்தில் திடீரென மேடையேறிய உதயம் சண்முகம், மைக்கைப் பிடுங்கிப் பேசித் தனது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். "திமுக நேரடியாகப் போட்டியிட்டுச் சுலபமாக ஜெயிக்க வேண்டிய அறந்தாங்கி தொகுதியை ஏன் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தீர்கள்?" என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேடையில் இருந்த பிற நிர்வாகிகள் அவருடன் உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உதயம் சண்முகத்தின் இந்த அதிரடிப் பேச்சுக்கு மேடையிலேயே முன்னாள் அமைச்சர் ரகுபதி சுடச்சுடப் பதிலடி கொடுத்தார். "அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வெற்றிபெற்றதற்கு உங்களது மகன்தான் முழுமுதற் காரணம். த.வெ.க வேட்பாளர் முகமது பர்வேஸுடன் சேர்ந்து தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரித்தது உங்கள் மகன்தான்; உங்களால் தான் அறந்தாங்கியில் தவெக வெற்றிபெற முடிந்தது" என்று ரகுபதி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகிய இரு உயர் மட்ட நிர்வாகிகளிடையே இடையே நடைபெற்ற இந்த நேருக்கு நேர் காரசார விவாதம் காரணமாகக் கூட்டத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த முன்னாள் எம்.பியும், மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் தலையிட்டு, மேடையில் அநாகரிகமாக நடந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் சலசலப்பில் ஈடுபட்ட கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்து அமைதிப்படுத்தினார். இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Heated Spat Between DMK Leaders Over Aranthangi Seat Allocation Former Minister Raghupathy and ExMLA Udayam Shanmugam Clash on Stage