எந்த கட்சியையும் நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை அதேபோல் திமுகவால் தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? - இபிஎஸ்
have not invited any party alliance DMK contest alone and win EPS
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டேன். நான் சென்ற இடங்களில் மக்கள் திரண்டு வந்து ஆதரவு கொடுத்தனர்.

இதை பார்க்கும் போது தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் என்பதில் தெளிவாக இருப்பது உறுதியாகியுள்ளது.அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது. இதனால் தான் பா.ஜ.க. ஆட்சியில் பங்கு கேட்பதாக தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்கள்.
அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.தி.மு.க.வை 2026-ம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்று முன்பு நான் தெரிவித்தேன். அதை பல கட்சிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன.
நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவுமில்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்.
அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றதை பல முறை நிரூபித்திருக்கிறது. ஆனால் தி.மு.க. பணத்தை வீசி சில கட்சிகளை அடிமையாக வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
English Summary
have not invited any party alliance DMK contest alone and win EPS