தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.. மத்திய அரசை ஜி கே வாசன் வலியுறுத்தல்.!!
gk vasan statement for republic day parade
மத்திய அரசு, நாட்டின் குடியரசுத் தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகள் 75 வது சுதந்திர தின ஆண்டை தேசம் முழுவதும் சீரோடும், சிறப்போடும் கொண்டாடுகின்ற காலம் இது.
இத்தகைய நல்ல சூழலில் வருகின்ற குடியரசுத் தினத்தன்று இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தியாகிகளின், வீரர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வழக்கமாக நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற வேண்டும் என்பது சிறப்பானது. ஆனால் இந்த வருட குடியரசுத் தினத்தன்று நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பின் போது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுப்பில் இடம்பெறாது என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
நடைபெற இருக்கின்ற குடியரசுத் தின விழாவின் போது தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் இடம்பெற வேண்டும், தமிழக தியாகிகள், வீரர்கள் ஆகியோரது பெயரும், புகழும் தேசம் முழுவதும், உலகம் முழுவதும் பரவ வேண்டும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., மகாகவி பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தியாகிகளின் புகழும், பெருமையும், தமிழக கலாச்சாரமும், வரலாறும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியின் அணிவகுப்பினால் மென்மேலும் பரவும்.
எனவே தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியின் அணிவகுப்பும் இடம்பெற வேண்டும் என்ற தமிழர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு டெல்லியில் நடத்தும் குடியரசுத் தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் அணிவகுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
gk vasan statement for republic day parade