தமிழகத்தில் ஐந்து தொகுதிகள் காலியாகியுள்ளது; அரசிதழ் வெளியீடு..!
Gazette notification issued stating that five constituencies in Tamil Nadu have become vacant
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் காலியாகியுள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளுக்கு அடுத்த ஆறு மாத கால இடைவெளிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததில் இருந்தே தமிழ்நாடு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பரபரப்புடன் சூடுபிடித்துள்ளது.
விஜய் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திருச்சி கிழக்கு நீங்கலாக, தவெக தனித்து 107 இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தினால், பல்வேறு கூட்டணி நடவடிக்கைகளில் இறங்கியது. அதிலும் முக்கியமாக திமுக கூட்டணி கட்சிகளை நாடி ஆதரவு கோரியது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகள் கொடுத்த ஆதரவின் அடிப்படையில் தவெக ஆட்சியை அமைத்துள்ளது.
இந்த சூழலில் திடீரென அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் தற்போது அவர்கள் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்றே மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டது.
ஆனால், இன்று, அதிமுக அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஆகா மொத்தம் தற்போது தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மொத்தம் காலியாகியுள்ளது.
English Summary
Gazette notification issued stating that five constituencies in Tamil Nadu have become vacant