வைகோ, விஜயபாஸ்கரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்!குதிரை பேரத்தில் விஜய்! - விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
Even Vaiko and Vijayabhaskar gave confessional statements Vijay involved in horse trading RB Udhayakumar levels severe criticism against Vijay
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் "குதிரைப் பேரம்" விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் மற்றும் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை பதவியேற்ற சில நாட்களிலேயே வேறு கட்சிக்கு அழைக்கும் முயற்சிகள் இதுவரை தமிழக அரசியலில் இல்லாத ஒன்று என்று குற்றம்சாட்டினார்.
அதிமுகவை குறிவைத்து அதன் எம்.எல்.ஏ.க்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபட்டு வருவதாகவும், அதிகாரத்தின் பலத்தை பயன்படுத்தி கட்சியை வளர்க்க நினைப்பது ஜனநாயகத்திற்கு நல்ல முன்னுதாரணம் அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அளித்த பேட்டிகளிலேயே இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளிப்பட்டதாக ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார். "ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள், வெற்றி பெறச் செய்கிறேன் என்று கூறியதாக வைகோ முதலில் தெரிவித்தார். பின்னர் தனது கருத்தை மாற்றினார். அதேபோல், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெக தரப்பிலிருந்து அணுகியதால் இணைந்ததாக கூறிய பிறகு விளக்கம் அளித்தார். இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.
கட்சியை வளர்ப்பது விசுவாசமான தொண்டர்களின் உழைப்பின் மூலமாக இருக்க வேண்டும்; வேறு கட்சியிலிருந்து தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, மேற்கு வங்காளத்தில் அரசியல் மாற்றங்கள், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் நிலை உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், அதிகாரத்தை மட்டுமே நம்பி அரசியல் நடத்துவது நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்றார்.
மேலும், அதிமுக என்பது பல தலைவர்களை உருவாக்கிய இயக்கம் என்றும், அந்தக் கட்சியில் இருந்து வெளியேறிய பலர் பின்னர் பிற கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் அவர் கூறினார். "அவர்கள் தங்களது அரசியல் விருப்பத்தின் அடிப்படையில் சென்றவர்கள்; விலை பேசி சென்றவர்கள் அல்ல" என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் கட்சி தாவல், எம்.எல்.ஏ.க்கள் விலகல் மற்றும் "குதிரைப் பேரம்" குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஆர்.பி. உதயகுமாரின் இந்த கருத்துகள் மீண்டும் அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
English Summary
Even Vaiko and Vijayabhaskar gave confessional statements Vijay involved in horse trading RB Udhayakumar levels severe criticism against Vijay