சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டம்! புதிய டெண்டர் வெளியீடு! 150 நாட்களில் முக்கிய ஆய்வுகள்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Bengaluru Bullet Train Project New tender issued! Key studies within 150 days Work gaining momentum
சென்னை - பெங்களூரு இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான ஆய்வு அறிக்கையை (Detailed Project Report) புதுப்பிப்பதற்கும், புதிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புல்லட் ரயில் பாதை சுமார் 306.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. சென்னை முதல் பெங்களூரு வரை செல்லும் இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி, பரந்தூர், சித்தூர், பங்காருபாளையம், கோலார், மாலூர் மற்றும் ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நிலத்தடி புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், அது சென்னை மெட்ரோ ரயில் வலையமைப்புடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பூந்தமல்லி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-4 அருகே உயர்மட்ட ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், புல்லட் ரயில் திட்டத்தில் பரந்தூருக்கு நிலையம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) மற்றும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பகுதிகள் வழியாக உயர்மட்ட ரயில் பாதைகள் அமைக்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டரின் அடிப்படையில், ட்ரோன் மற்றும் LiDAR தொழில்நுட்பங்கள் மூலம் நில அளவீடு, புவியியல் மற்றும் மண் தர ஆய்வு, நீரியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் திட்டத்தின் விரிவான அறிக்கை புதுப்பிக்கப்படும்.
இந்த பணிகளை 150 நாட்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புல்லட் ரயில் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் தற்போதைய கால அளவைக் காட்டிலும் கணிசமாகக் குறையும். இதன் மூலம் இரு மாநகரங்களுக்கும் இடையேயான தொழில், வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chennai Bengaluru Bullet Train Project New tender issued! Key studies within 150 days Work gaining momentum