கட்சி மாறினாலும்...விசுவாசம் மாறாது...! ஜெயலலிதாவின் படத்தை நெஞ்சோடு அணைத்து பதவியேற்ற செங்கோட்டையன்...!
Even if party changes loyalty does not change Sengottaiyan took office hugging Jayalalithaa picture
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று உற்சாகமான அரசியல் சூழலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று வருகின்றனர்.முதலாவதாக பெரம்பூர் தொகுதியில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் அவையில் உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தருணமாக, மூத்த அரசியல்வாதியும் தற்போதைய அமைச்சருமான செங்கோட்டையன் சட்டைப்பையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து கொண்டு பதவியேற்றது அமைந்தது.
அரசியல் பயணத்தின் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க.வில் முக்கிய தலைவராக திகழ்ந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்டவர்.
பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவர், தற்போது விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
அமைச்சரான பிறகும் ஜெயலலிதா மீதான அவரது மரியாதையும் பாசமும் மாறாதிருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, சட்டைப்பையில் அவரது புகைப்படத்தை வைத்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நேற்று அமைச்சர் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் ஜெயலலிதா புகைப்படத்துடன் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
English Summary
Even if party changes loyalty does not change Sengottaiyan took office hugging Jayalalithaa picture