ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு தயாராகும் அதிமுக! நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!
EPS consultation with AIADMK executives in Chennai
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் மாநில மாநாடு மதுரையில் கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக மாநாடு குழு நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
![](https://img.seithipunal.com/media/epsjkjkjkkj.jpg)
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போன்று மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலும் நடத்தினால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்ய உள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![](https://img.seithipunal.com/media/admk irattai ilai 2023.png)
மேலும் அதிமுகவை அமைப்பு ரீதியில் வலுப்படுத்தும் வகையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் 117 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
அதேபோன்று அமைப்பு ரீதியில் தற்போது 75 மாவட்டங்களாக உள்ளதை 90 முதல் 100 மாவட்டங்களாக பிரிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு பிரிந்து சென்ற மாவட்டச் செயலாளர்களின் பதவிகளும் காலியாக உள்ளதால் அதற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
![](https://img.seithipunal.com/media/ADMK 2LEAF-352rn.png)
தற்போது அதிமுக எதிர்வரும் பொது தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அந்த பணிகளின் தற்போதைய நிலை குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றாலும் அதை எதிர் கொள்ள தயாராகும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
EPS consultation with AIADMK executives in Chennai