யெப்பா..என்ன மாதிரியான படம்!ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்! ‘துரந்தர் 2’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
A film that every Indian should watch Rajinikanth praises Dhurandhar2
இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் இந்த படத்தை பாராட்டியிருந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தை பாராட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) தள பதிவில்,“யெப்பா.. என்ன மாதிரியான படம்! ஆதித்ய தார் உங்களுக்கு சல்யூட். பாக்ஸ் ஆபீஸின் மாஸ்டர். ரன்வீர் சிங் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் துரந்தர் 2. ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் படக்குழுவினருக்கும் இது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின் படி, மார்ச் 23ஆம் தேதி வரை உலகம் முழுவதும் இந்த படம் சுமார் 752 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் சுமார் நான்கு மணி நேரம் நீளமானதாக இருந்தாலும், கதையை விறுவிறுப்பாக இயக்கியிருப்பதற்காக இயக்குநர் ஆதித்ய தாரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பு, படத்தில் இடம்பெற்றுள்ள பல திருப்பங்கள் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
எனினும், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், அந்த காலகட்டத்தில் பிரதமராக இல்லாத நரேந்திர மோடியை உயர்த்திப் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், பணமதிப்பிழப்பு போன்ற விவகாரங்களுக்கு ஆதரவாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
English Summary
A film that every Indian should watch Rajinikanth praises Dhurandhar2