தேர்தல் முடிவு நிரந்தரமானது அல்ல; தவெகவும் இதை உணர வேண்டும் – முத்தரசன்
Election results are not permanent TVK too must realize this Mutharasan
ஒரு சட்டசபைத் தேர்தல் முடிவை மட்டும் வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை மதிப்பிட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவும், தோல்வியடைந்த மற்ற கட்சிகளும் தற்போதைய தேர்தல் முடிவு நிரந்தரமானது அல்ல என்பதை உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
இதில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “வெறுமனே ஒரு சட்டசபைத் தேர்தலை மட்டும் வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை முடிவு செய்துவிட முடியாது. கடந்த கால தேர்தல் முடிவுகளையும் பார்க்க வேண்டும். தேர்தலில் தோற்றவர்களும், வென்றவர்களும் இது நிரந்தரம் இல்லை என்பதை உணர வேண்டும். இது இந்த தேர்தலின் முடிவு அவ்வளவுதான்” என தெரிவித்தார்.
இதன் மூலம், தற்போதைய தேர்தல் வெற்றியை வைத்து தவெக தனது அரசியல் பலத்தை நிரந்தரமானதாக கருதக்கூடாது என்றும், அதேபோல் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளும் தங்களது அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டியதில்லை என்றும் முத்தரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கும் முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார். தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ஒரு கிராம் தங்கத்தை ஒரு பைசாவுக்கு வழங்குவது எப்படி சாத்தியம் என அவர் முன்பு கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், திட்டத்தில் தங்கம் சந்தை விலைக்கே வாங்கப்படும் என்றும், ஒரு பைசா என்பது செய்கூலி உள்ளிட்ட இதர செலவுகளுக்கான தொகை மட்டுமே என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முத்தரசன், “சில ஊடகங்களில் வந்த தகவலை வைத்து தவறாகக் கூறிவிட்டேன். அந்த கருத்துக்கு சாரி” என தனது முந்தைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
English Summary
Election results are not permanent TVK too must realize this Mutharasan