செங்கோட்டையனின் இன்றைய பேட்டி தொடர்பில் வாய்திறக்காத எடப்பாடி பழனிசாமி ..!
Edappadi Palaniswami avoided talking about Sengottaiyans interview today
இன்று தேனி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் போது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்துள்ளமை பேசும் பொருளாகியுள்ளது.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் பிரச்சாத்தின் போது அவர் பேசியதாவது;
இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரம் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை பலப்படுத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விவசாயிகளைப் பற்றியோ, அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றியோ ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது என்றும், கிடைக்கின்ற சந்தர்பத்தை மக்கள் நன்மைக்கு முழுமையாகப் பயன்படுத்துவதுதான் உண்மையான அரசு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இன்று ஆடுதுறை பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அவர் அருகில் இருந்த இருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், குற்றவாளிகள் போலீசாரைத் தாக்குகிறார்கள். போலீசையே தாக்குகிறார்கள் என்றால் மக்களை பாதுகாப்பது யார்…? என்று கேள்வி எழுப்பியதோடு, போலீசைக் கண்டு குற்றவாளிகளுக்கு பயமே இல்லை என்று எடப்பாடிபழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஅத்துடன், தமிழக மக்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் சரிவை சந்தித்து வருகிறது என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை என்றும், இன்றைய ஆட்சியாளர்கள் குடும்பத்தை மட்டும் பற்றியே கவலைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி வரைக்கும் வந்துவிட்டனர். இவர்கள்தான் நாட்டை ஆளவேண்டுமா..? என மக்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய இ.பி.எஸ், ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை பேட்டி கொடுத்திருந்தார். அதில், 'கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அரவணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு 10 நாள் காலக்கெடு விதிக்கிறேன்' என்று கூறியிருந்தார். இதைப் பற்றி இபிஎஸ் பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இபிஎஸ் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Edappadi Palaniswami avoided talking about Sengottaiyans interview today