பிரசவித்த பெண்ணை 2 கி.மீ. முன்பே இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
Mother baby Maharastra Ambulance driver
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனையில் பிரசவித்த 20 வயதான பெண்மணியை, அவரது கிராமத்திற்கு 2 கிலோமீட்டருக்கு முன்பே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் குழந்தை பெற்ற அந்தப் பெண், தனது தாய் மற்றும் மாமியாருடன் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சம்பவம்: அம்லா கிராமத்தைச் சேர்ந்த சவிதா பாரத், நவம்பர் 19 அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜவஹர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சவிதாவுக்கு அங்குப் பிரசவம் நடந்தது. நவம்பர் 24 அன்று தாயும் சேயும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
மனிதாபிமானமற்ற செயல்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கிராமத்தை அடைவதற்கு 2 கி.மீ. முன்னரே அவர்களை இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால், பிரசவித்த சவிதா தனது தாய், மாமியார் உதவியுடன் நடக்க முடியாமல் சிரமப்பட்டபடி கிராமத்தை நோக்கிச் சென்றார்.
வீடியோவும் விசாரணையும்
இதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, "அந்தத் தாய்க்கு ஏதாவது ஆனால் யார் பொறுப்பு? அரசு பதில் சொல்ல வேண்டும்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நடவடிக்கை: வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மொகதா தாலுகாவின் சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தாயும் சேயும் நலம்: சம்பவம் குறித்து அறிந்தவுடன் மருத்துவக் குழு அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்ததாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது தொடர்வதாகவும், இதற்கு மாநில அரசு மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
English Summary
Mother baby Maharastra Ambulance driver