"போதையில்லா பொள்ளாச்சி"!அண்ணாமலையின் WE THE LEADERS முதல் மாநாடு! என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு!
Drug free Pollachi Annamalai first We the Leaders conference! Anticipation builds over what he will say
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள "We the Leaders" அமைப்பின் சார்பில், "போதையில்லா பொள்ளாச்சி" என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு இன்று பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. பாஜகவில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை தலைமையில் நடைபெறும் முதல் பெரிய பொதுநிகழ்வாக இந்த மாநாடு பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக பாஜக தலைவராக 2021 முதல் 2025 வரை செயல்பட்ட அண்ணாமலை, தனது அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால் கவனம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கட்சியை வழிநடத்திய அவர், பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
தனிக்கட்சி தொடங்குவது குறித்து நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முன்பாக சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதாக அண்ணாமலை அறிவித்தார். அதன் அடிப்படையில் "We the Leaders" என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமைப்பின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக, "போதையில்லா பொள்ளாச்சி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் பொதுமக்களுக்காக குடிநீர், மருத்துவ உதவி, கழிப்பறை வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாஜகவில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை இதுவரை செய்தியாளர்களை சந்தித்து விரிவாக கருத்து தெரிவிக்கவில்லை. பல்வேறு அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் அவர் அமைதியை கடைபிடித்து வந்தார்.
இதனால், இன்றைய மாநாட்டில் அண்ணாமலை தனது எதிர்கால அரசியல் திட்டங்கள், புதிய அமைப்பின் நோக்கங்கள், தனிக்கட்சி குறித்த நிலைப்பாடு மற்றும் தமிழக அரசியல் தொடர்பான தனது பார்வையை வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அண்ணாமலையின் இந்த மாநாடு, அவரது அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்கான முக்கிய தொடக்கமாக அமையுமா என்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Drug free Pollachi Annamalai first We the Leaders conference! Anticipation builds over what he will say