41 ஆண்டுகால வேதனை இன்று மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது.! மருத்துவர் இராமதாஸ் உருக்கம்.!
Dr Ramadoss
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று வெண்கல பதக்கதிற்கான (மூன்றாவது இடம்) ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்று, பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த 1980 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அணி பதக்கம் வென்று இருப்பதால் நம் இந்திய மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். பதக்கம் வென்றுள்ள இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்!
ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால், 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு 41 ஆண்டுகளாக ஹாக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது!
2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும்!" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.