கடந்த ஆட்சிகளை குறைகூறி காலம் கடத்த வேண்டாம்...! - மணல் கொள்ளையை தடுக்க தவெக அரசுக்கு டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
Dont waste time criticizing past regimes TTV Dinakaran urges tvk government stop sand looting
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எழுந்துவரும் சட்டவிரோத மணல் கொள்ளை புகார்களுக்கு தமிழக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இயற்கை வளத்தை சுரண்டும் இந்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.குறிப்பாக, உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மணல் கொள்ளை தொடர்பாக காவலர்களிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவலர்கள், பொதுமக்கள் முன்வந்து அளிக்கும் புகார்களில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகவும், சில சட்டமன்ற உறுப்பினர்களே மணல் கொள்ளையில் நேரடியாக ஈடுபடுவதாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு முந்தைய திராவிட ஆட்சிகளை மட்டுமே குறைகூறி காலம் கடத்தாமல், தற்போதைய அரசு நேரடியாக களத்தில் இறங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் பாகுபாடின்றி சட்டவிரோத மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், மணல் அள்ளப்படும் பகுதிகளில் காவலர்களின் ரோந்து பணியையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன், மணல் கொள்ளைக்கு துணைபோகும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Dont waste time criticizing past regimes TTV Dinakaran urges tvk government stop sand looting