நடிகை கவுதமி நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..! - அழகப்பன் உட்பட 3 பேர் எப்படி பிடிப்பட்டார்கள்...?
Actress Gautami land scam case Enforcement Directorate takes action How were 3 people including Alagappan caught
நடிகை கவுதமிக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.26 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்று பணப் பரிமாற்றத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது குடும்ப நண்பர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில் கொண்டு ஆர்த்திக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அழகப்பன் உள்ளிட்ட 3 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வரும் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த அழகப்பன், நடிகை கவுதமியின் குடும்ப நண்பராக இருந்ததாக கூறப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மகளின் எதிர்கால கல்விச் செலவுகளுக்காக அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும் கவுதமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குடும்ப நண்பரான அழகப்பனிடம் தெரிவித்த நிலையில், நிலத்தை விற்பனை செய்வதற்காக தனது பெயரில் பொது அதிகார பத்திரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.நிலத்தை விற்பனை செய்த பின்னர், அதன் மூலம் ரூ.6 கோடி மட்டுமே கிடைத்ததாக அழகப்பன் தெரிவித்ததாகவும், ஆனால் உண்மையான விற்பனை மதிப்பு குறித்து முறைகேடு செய்யப்பட்டதாகவும் கவுதமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அழகப்பனின் மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன் சிவா மற்றும் மருமகள் ஆர்த்தி ஆகிய 4 பேரையும் கேரள மாநிலம் திருச்சூரில் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.நில மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக கடந்த 17-ந்தேதி அழகப்பனுக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விளக்கம் பெற நடிகை கவுதமிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.அதன்படி, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான கவுதமி, அதிகாரிகளிடம் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
இந்த நிலையில், அழகப்பன், நாச்சாள், சிவா மற்றும் ஆர்த்தி ஆகிய 4 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில் கொண்டு ஆர்த்திக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அழகப்பன், நாச்சாள் மற்றும் சிவா ஆகிய 3 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நில மோசடி மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
Actress Gautami land scam case Enforcement Directorate takes action How were 3 people including Alagappan caught