அனுமதி இல்லாமல் வெளியிடாதீங்க...! - பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அதிரடி எச்சரிக்கை...!
Do not publish without permission Speaker issues stern warning Assembly member
தமிழக சட்டசபையில் பேரவை விதிமுறைகள் தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடுமையான அறிவுறுத்தலை வெளியிட்டார். பேரவையில் அனுமதி பெறுவதற்கு முன்பாக உறுப்பினர்கள் தங்களது அறிவிப்புகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவை விதி எண் 55, 56 உள்ளிட்டவற்றின் கீழ் உறுப்பினர்கள் அளிக்கும் அறிவிப்புகள், பேரவை செயலாளர் அல்லது சபாநாயகரின் அனுமதிக்குப் பிறகே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால், சில உறுப்பினர்கள் தாங்கள் அளிக்கும் அறிவிப்புகளை அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற செயல்பாடுகளை இனிமேல் உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.பேரவை உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில், சபாநாயகரின் அனுமதிக்கு முன்பாக பேரவை அறிவிப்புகளை வெளியிடுவது விதிமுறைகளுக்கு முரணானது.
இதுதொடர்பாக பேரவை விதி எண் 36-ன் 5-வது உட்பிரிவில் தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.அதன்படி, சபாநாயகர் அனுமதி வழங்கி, சம்பந்தப்பட்ட அறிவிப்பு உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் வரை அதனை உறுப்பினரோ அல்லது வேறு யாருமோ வெளியிடக்கூடாது என அவர் விளக்கினார்.
மேலும், இனிமேல் பேரவை உறுப்பினர்கள் யாரேனும் சபாநாயகரின் அனுமதிக்கு முன்பாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால், அவற்றை தொலைக்காட்சிகள், ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு தளத்திலும் பிரசுரிக்கவோ வெளியிடவோ கூடாது என சபாநாயகர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் மாண்பையும் நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு, அனைத்து உறுப்பினர்களும் பேரவை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்" என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
English Summary
Do not publish without permission Speaker issues stern warning Assembly member