திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான மோசடி வழக்கில் திடீர் திருப்பம்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
dmk mp jagath rakshakan case issue
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.,யுமான ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு, அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன். குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக எழுந்த மோசடிப் புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், இடைக்கால தடை கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பில் ஒரு குற்றசாட்டு வைக்கப்பட்டது.

அதன்படி, "ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, அவரின் மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு நாங்கள் சம்மன் அனுப்பியும் இதுவரை அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை" என்ற குற்றச்சாட்டினை சிபிசிஐடி போலீசார் முன்வைத்தனர்.
சிபிசிஐடி இந்த குற்றச்சாட்டுக்கு ஜெகத்ரட்சகன் தரப்பில், "ஜெகத்ரட்சகன். அவரது மனைவி. மைத்துனர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஜெகத்ரட்சகன் நேற்றுதான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி, "வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராவது குறித்து சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, அந்த சம்மனில் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, காவல்துறையின் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

மேலும், அக்டோபர் 5ஆம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
English Summary
dmk mp jagath rakshakan case issue