ச்சீ ச்சீ! வெற்று விளம்பரம் செய்யும் திமுக! அரசு ஊராட்சி நிதியில் ஆட்டம் போடுகிறது! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள், திமுக அரசு ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள முனைப்பு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.அதுமட்டுமின்றி, அரசு விளம்பரங்களை தமிழகம் முழுவதுமுள்ள ஊராட்சிகளில் வெளியிட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:

இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது,"ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள அரசு பணத்தை செலவிட முனைப்பு காட்டும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மூன்று நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்றும், அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு LED திரைகளைப் பொருத்தும் பணியை வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையை விட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்திற்கு ஒரு LEDதிரைக்கு சுமார் ரூ. 7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான LED திரையை வாங்க சுமார் ரூ.10,000/- வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும், பஞ்சாயத்து கிளர்க்குகளும் அந்நிறுவனத்திற்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் LED திரைக்கான தொகையையும் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனர்.தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். ஏற்கெனவே, 2006-2011 ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி தங்களது குடும்பத் தொலைகாட்சி நிறுவனங்களின் நிதிநிலையை வளர்த்துக்கொண்டது.

ஏற்கெனவே 4 ஆண்டுகளாக வெற்று விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தது போக, ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தராமல், அந்நிதியை மடை மாற்றும் விடியா திமுக ஸ்டாலினின் (ஏமாற்று) மாடல் அரசின் கடந்த நான்காண்டு கால நடவடிக்கைகள் வேதனையைத்தான் தந்துள்ளது என்று தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்நிலையில் 4 ஆண்டு சாதனை என்று பொய்யான செய்திகளை வீடியோக்களாகத் தயாரித்து அதை கிராமங்கள்தோறும் LED திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

'கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்' என்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படும் ஊழல் மாடல் தி.மு.க. அரசு, டு.நு.னு. திரை அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளை அடிக்க முயல்வது கண்டனத்திற்குரியதாகும். மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாங்கள் எதுவும் செய்வோம், யாரும் எங்களைக் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் மக்களின் வரிப் பணத்தை தங்களுடைய சுயநலத்திற்காக செலவிடுவது கண்டிக்கத்தக்கது. அதற்கான விலையை விரைவில் ஏற்படவுள்ள ஆட்சி சதற்றத்திற்குப் பின் தர நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK is doing empty advertising government is playing with panchayat funds Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->