திமுக மாவட்ட மறுசீரமைப்பு.. சீனியர்களின் கோட்டையே ஆட்டம்! செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்பெஷல் ஆப்ஷனா? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் என்ன?
DMK district reorganization The strongholds of veterans are shaken Is there a special arrangement just for Senthil Balaji What is Stalin master plan
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை, கட்சிக்குள் நீண்ட காலமாக நிலவி வந்த அதிகார சமநிலையையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, பல சீனியர் நிர்வாகிகளின் அரசியல் கணக்குகளையும் மாற்றியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக மறுசீரமைப்பு குழு ஏற்கனவே வழங்கியிருந்த அறிக்கையின் அடிப்படையிலேயே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் புதிய கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால் சோளிங்கர் மட்டும் தனி கட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மறுசீரமைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இருந்த அமைப்பில் ஐ.பி.செந்தில்குமார் கட்டுப்பாட்டில் 4 மாவட்டங்களும், முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் கட்டுப்பாட்டில் 3 தொகுதிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த 7 தொகுதிகளும் 3 புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பழனி–ஒட்டன்சத்திரம்–வேடசந்தூர், திண்டுக்கல்–நத்தம், நிலக்கோட்டை–ஆத்தூர் என புதிய மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இதுவரை தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் குறைந்துவிட்டதாக கருதும் சில நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற சூழல் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களது கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகள் பிரிக்கப்பட்டதால் சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மாவட்ட மறுசீரமைப்பு என்பது வெறும் நிர்வாக மாற்றமாக இல்லாமல், பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த உள்ளூர் அரசியல் அதிகார சமநிலையையும் மாற்றியமைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான அதிகாரப்பூர்வ மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் பட்டியல் வெளியான பிறகே தற்போது நிலவும் அதிருப்தி மேலும் அதிகரிக்குமா அல்லது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதன் மூலம் நிலைமை சீராகுமா என்பது தெரியவரும் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு யார் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பது பல சீனியர் நிர்வாகிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளையும் தீர்மானிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாவட்ட மறுசீரமைப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் நிலையும் பேசுபொருளாகியுள்ளது. கரூரை மையமாகக் கொண்டு நீண்டகாலமாக அரசியல் செய்து வந்த அவர், தற்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
இந்நிலையில், புதிய மாவட்ட அமைப்பில் அவருக்கு எந்தப் பகுதியின் பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி திமுகவுக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகள் தற்போது கரூர் கிழக்கு, கரூர் மேற்கு என 2 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அரசியலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பாரா அல்லது கோவை பகுதியில் அவருக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கரூர் மற்றும் கோவை என இரு பகுதிகளிலும் தனது அரசியல் செல்வாக்கை தொடர்ந்து வைத்திருக்க செந்தில் பாலாஜி விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், தலைமை தரப்பில் அவருக்கு “கரூர் அல்லது கோவை, இரண்டில் எந்தப் பகுதியை நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்ற வகையில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதான் கட்சிக்குள் சிலரிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஒருவர் எந்தப் பகுதியில் வாக்குரிமை பெற்றிருக்கிறாரோ, அந்தப் பகுதியில்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவது திமுகவில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால், செந்தில் பாலாஜிக்கு மட்டும் இரண்டு பகுதிகளில் ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது ஏன் என்ற கேள்வியும் கட்சிக்குள் எழுந்துள்ளதாக தெரிகிறது.
ஒருபுறம் மாவட்டங்களை சிறிய அளவில் பிரித்து, நீண்ட காலமாக சில சீனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அதிகாரத்தை மறுசீரமைக்கும் திமுக தலைமை, மறுபுறம் செந்தில் பாலாஜி போன்ற முக்கியமான நிர்வாகிகளை தக்கவைத்துக்கொண்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
சிறிய அளவிலான கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால், மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை நேரடியாக கண்காணிக்க முடியும் என்பதே தலைமை தரப்பின் கணக்கு என கூறப்படுகிறது.
இதன்மூலம் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி அமைப்பு, கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கட்சியின் அடிமட்ட கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை வேகமாக மேற்கொள்ள முடியும் என்றும் திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.
மேலும், நீண்ட காலமாக ஒரே நபரின் அரசியல் செல்வாக்குக்குள் இருந்த பகுதிகளில் புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் கட்சிக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்கவும் இந்த மறுசீரமைப்பு உதவும் என தலைமை தரப்பு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
“கட்சியின் தேர்தல் பணிக்காக எடுக்கப்படும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனால், தற்போது மாவட்ட மறுசீரமைப்பு சில இடங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பின்னணியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கமே இருப்பதாக கூறப்படுகிறது.
சிறிய மாவட்டங்கள் மூலம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியையும் தனித்தனியாக கண்காணித்து, வாக்குச்சாவடி அளவிலான பணிகளை தீவிரப்படுத்துவது திமுகவின் முக்கிய தேர்தல் வியூகமாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், தற்போது சில சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள மாவட்ட மறுசீரமைப்பு, தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு அமைப்பு ரீதியாக பலன் தருமா என்பதே அடுத்தகட்ட அரசியல் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
English Summary
DMK district reorganization The strongholds of veterans are shaken Is there a special arrangement just for Senthil Balaji What is Stalin master plan