அனைத்து கட்சி கூட்டம்: முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
DMK All Party Meeting TN Chief Minister MK Stalin
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மொத்தம் 64 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 21 கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தலைமையிலான பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், கூட்டத்தின் முக்கிய அம்சமாக எஸ்ஐஆர் (Special Intensive Revision) நடவடிக்கையை எதிர்ப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் பேசும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் தமிழக அரசு எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக உள்ளது என்பதை விளக்கினார்.
அவர் கூறியதாவது: “நேர்மையான தேர்தலை உறுதி செய்ய சரியான வாக்காளர் பட்டியல் அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்கான திருத்தப் பணிகளுக்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில் முழுமையான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் அரசியல் தந்திரமாகும். இது ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையை பறிக்கும் செயல்.”
அவர் மேலும் கூறியதாவது, “பீகார் மாநிலத்தில் இதே நடவடிக்கை மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அதே முறை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்” என்றார்.
இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். கூட்டத்தின் முடிவில், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary
DMK All Party Meeting TN Chief Minister MK Stalin