அப்பா...உங்கள் கனவை நான் நனவாக்குவேன்...! - ராஜீவ் காந்தி நினைவிடத்தில் உருகிய ராகுல் காந்தி...! நெகிழ்ச்சிப் புகைப்படம்!
Dad I will make your dream come true Rahul Gandhi melts at Rajiv Gandhi memorial touching photo
முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்ற தலைவருமான ராஜீவ்காந்தியின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அவரது மகனுமான ராகுல்காந்தி, “நீங்கள் கனவு கண்ட வலிமையான, வளமான, திறமையால் உயர்ந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை முழுமையாக என் தோள்களில் சுமப்பேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவரது மறைவின் 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடமான வீர்பூமியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி வெளியிட்டிருந்த பதிவில், “அப்பா, உங்கள் கனவுகளின் இந்தியாவை கட்டியெழுப்பும் கடமையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சிந்தனைகள், வழிகாட்டுதல்கள், விழுமியங்கள் மற்றும் நினைவுகள் எப்போதும் என்னுடன் பயணிக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில், “நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ்காந்தியின் பங்களிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இளைஞர்களின் ஆற்றலை நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18-ஆக குறைத்து ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்களிப்பை உயர்த்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கிராமப்புற ஜனநாயகத்தை வலுப்படுத்த பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியதுடன், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிமயமாக்கல் வழியாக இந்தியாவை புதிய வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும்” என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது அஞ்சலி பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளில் மரியாதை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Dad I will make your dream come true Rahul Gandhi melts at Rajiv Gandhi memorial touching photo