தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு; கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை விடுதி மாணவிகளுக்கு 12 நாள் விடுமுறை..!
12 day holiday for Kodaikanal Mother Teresa University hostel students due to severe water shortage
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் குடிநீர் பயன்பாடு அல்லாத தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலான மாணவிகள் பல்கலைக்கழகத்தின் விடுதிகளிலேயே தங்கி படித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் கேட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் குடிநீர் மற்றும் குடிநீர் பயன்பாடு அல்லாத தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாணவிகள், பேராசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது பல்கலைகழக வளாகத்தில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்று வருவதால் வெளி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால்வேறு வழியின்றி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 05) முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தினமும் வீடுகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவைக்கேற்ப லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் கல்வி பாதிக்காமல் இருக்க தண்ணீர் தேவையை உடனே பூர்த்தி செய்ய தீவிர நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் களம் இறங்கியுள்ளது.
English Summary
12 day holiday for Kodaikanal Mother Teresa University hostel students due to severe water shortage