சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150 நிர்வாகிகள் அதிமுக பதவிகளை ராஜினாமா..!
CV Shanmugam supporters 1150 AIADMK executives resign from their posts
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 108 இடங்களில் வென்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. திமுக இரண்டாம் இடத்திற்கும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் இந்தத் தேர்தலில் தள்ளப்பட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சி டெப்பாசிட் இழந்தது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனை வெடித்தது.
குறிப்பாக சி. விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
பின்னர் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், சி. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். அதேநேரம் சி.வி. சண்முகம் மௌனம் காத்துவந்த நிலையில், தவெக அரசுக்கு அவர் ஆதரவு அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இதனால் அதிமுக தலைமை மீது சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், சென்னை வந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 1,150 பேர், தங்களது ராஜினாமா கடிதங்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மூலம் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
English Summary
CV Shanmugam supporters 1150 AIADMK executives resign from their posts