இந்த அவமரியாதைச் செயல்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது - செல்வப்பெருந்தகை !
congress condemn to BJP
தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியக் குடியரசு தினம் என்பது நமது அரசியல் மாண்புகள், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் மகத்தான நாள்.
அத்தகைய புனிதமான விழாவில், இந்தியத் திருநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களையும் மூன்றாவது வரிசையில் அமர வைத்திருப்பது, ஒன்றிய பாஜக அரசின் அகந்தையின் வெளிப்படையான சான்றாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அரசியலமைப்புச் சாசன மரபின்படி வழங்கப்பட வேண்டிய மரியாதையை திட்டமிட்டு மறுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.
தேசிய விழாக்களில் கூட கட்சி பாரபட்சத்தை புகுத்தும் பாஜக அரசின் அணுகுமுறை அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக ஒழுக்கத்திற்கும் முற்றிலும் முரணானது.
இந்த அவமரியாதைச் செயல்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.