இன்று முதல் புகையிலை பொருட்கள் விலை உயர்வு...! - உற்பத்தியாளர்களுக்கு கடும் விதிமுறைகள்
Tobacco product prices increase from today Strict regulations manufacturers
நாடு முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தின் கீழ், சிகரெட், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா போன்றவை ‘பாவப் பொருட்கள்’ என வகைப்படுத்தப்பட்டு தொடக்கம் முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்தப் பொருட்களுக்கான வரியை கடுமையாக திருத்தியது. அதன்படி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் இந்த கூடுதல் 40 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி நடைமுறைக்கு வந்துள்ளது. இனிமேல், பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பான் மசாலா உற்பத்தியாளர்கள் ‘சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ்’ சட்டத்தின் கீழ் புதிய பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிலையங்களில் அனைத்து பேக்கிங் இயந்திரங்களையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் நிறுவ வேண்டும்.
அவற்றின் காணொளி பதிவுகளை குறைந்தது 24 மாதங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.சிகரெட்டின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 மிமீ சிகரெட்டுக்கு ரூ.2.10, 70 மிமீக்கு ரூ.4, 75 மிமீக்கு ரூ.5.40 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது 40 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மேலாக விதிக்கப்படும் கூடுதல் சுமையாகும்.மேலும், மென்று தின்னும் புகையிலைக்கு 82 சதவீதம், குட்காவுக்கு 91 சதவீதம், பான் மசாலாவுக்கு 88 சதவீதம் என மிக உயர்ந்த கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரிசில் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வரி உயர்வின் தாக்கமாக, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் சந்தை 68 சதவீதம் வரை சரிவடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tobacco product prices increase from today Strict regulations manufacturers