நெல் ஈரப்பதம் உயர்வு, கொள்முதல் இலக்கு மாற்றம்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
CM MK Stalin letter to PM Modi Paddy issue
சென்னை: தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் நெல் உற்பத்தி மற்றும் கொள்முதல் சாதனையைப் படைத்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%லிருந்து 22% ஆக உயர்த்துதல் உள்ளிட்ட அவசரத் தேவைகளைக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கொள்முதல் சாதனை மற்றும் இலக்கு உயர்வு
நடப்பாண்டில் குறுவைப் பருவத்தில் நெல் கொள்முதல், கடந்த ஆண்டின் 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து, தமிழக வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 3,559 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கை: நெல் உற்பத்தியில் ஏற்பட்ட இந்தச் சாதனை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, 2025-2026-ஆம் ஆண்டுக்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் இலக்கை, மொத்த நெல் கொள்முதலுக்கேற்ப உயர்த்தித் திருத்தம் செய்ய அனுமதி வழங்கக் கோரப்பட்டுள்ளது.
ஈரப்பதத் தளர்வு மற்றும் வடகிழக்குப் பருவமழை
வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%லிருந்து 22% ஆக உயர்த்தக் கோரி ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு அக்டோபர் 19-ஆம் தேதி கோரிக்கை விடுக்கப்பட்டது. குழுக்கள் ஆய்வு செய்தும், இதுவரை தளர்வுக்கான உத்தரவுகள் கிடைக்கவில்லை. நவம்பர் 16 முதல் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி இந்தத் தளர்வு உத்தரவை விரைந்து வழங்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகச் சிக்கல்கள்
செறிவூட்டப்பட்ட அரிசி (FRK) மணிகளின் மாதிரி எடுக்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், காலதாமதத்தைக் குறைக்க சிப்பமிடும் அளவை 50 கிலோவாகவும், மாதிரி தொகுதி அளவை 25 மெ.டன்னாகவும் அதிகரிக்கவும், மாதிரி எடுக்கும் அதிகாரத்தைத் தென் மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கவும் கோரியுள்ளார்.
English Summary
CM MK Stalin letter to PM Modi Paddy issue