மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசரக் கடிதம்.!!
CM MK STALIN LETTER TO CENTRAL MINISTER S JAISANKAR
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 31-1-2022 அன்று 12 மீனவர்கள் IND - TN - 06 - MM - 7747 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடி விசைப்படகில் நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும், அதேபோன்று, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த IND - PY - PM - MM - 1139 என்ற பதிவு எண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 மீனவர்களுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 3 சம்பவங்களில், 68 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள் என்றும், இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீளவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதோடு, அக்குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் உடளடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
CM MK STALIN LETTER TO CENTRAL MINISTER S JAISANKAR