'பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'; சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். அப்போது, குழந்​தைகள், பெண்​களின் பாதுகாப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்து இருந்த நிலையில், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்திட்​டார்.

இதைத் தொடர்ந்​து, அதிரடிப்படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 02 டிஎஸ்​பி, மற்​றும் 04 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதனை தொடந்து, சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர் எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இன்று நடைப்பெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதோடு, விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை லட்சினையை முதல்வர் வெளியிட ஐ.ஜி பவானீஸ்​வரி பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய்யே இயக்கி துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் விஜய் கூறியதாவது;

ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அந்த மாதிரியான நிகழ்ச்சிதான் இன்றைய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா இது என்று நெகிழ்ச்சியாக கூறியதோடு, நம் பாட்டி, அம்மா, தங்கைகள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சொன்னோம். அது தேர்தலுக்காக சொன்னது இல்லை, மனதிலிருந்து உண்மையாக சொன்னதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெண்களுக்கான பாதுகாப்பில் எப்போதும் ஜீரோ டாலரன்ஸ் தான். அதில் உறுதியாக உள்ளோம் என்று கூறியதோடு, நாங்கள் சொன்னது எல்லாவற்றையும் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வருவோம், அதில் தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனால்தான் ஆட்சிக்கு வந்த உடனே இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததாகவும், தமிழக பெண்கள் பாதுகாப்பாக, தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் எனவும், அதற்கான முதல்படி தான் இது. பெண்களுக்கு நடக்கும் இன்றைய கொடுமைகளை பார்க்கும்போது மனது பதறுகிறது, கண்கள் கலங்குகிறது. அவர்கள் எல்லாம் நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே. இதற்கான காரணத்தை ரீல்ஸில் தேட முடியாது உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அத்துடன், இந்தக் கொடுமைகள் நடக்க காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான் என்றும், அதனை  வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும், இது இப்போது மே 10-ஆம் தேதி முதல் இருக்கும் பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் விட்டதுதான், அந்த வேர் இவ்வளவு பரவுவதற்கு காரணம் என்றும், இதனை கண்டுகொள்ளாமல் விட்டது யார் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை என்றும், அதனைப் பற்றி பேசி இப்போது பிரயோஜனம் இல்லை என்று கூறியதோடு, முதலில் இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதியாகும். அப்போதுதான் சட்டம் - ஒழுங்கும் சரியாகும் என்று பேசியுள்ளார்.

அத்துடன், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்று ஒன்று தொடர்புடையது என்றும், பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை, இதில் சமூக ஒழுங்கும், தனிமனித கட்டுப்பாடும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது தனிமனிதன் ஒழுங்காக கட்டுப்பாட்டோடு இருந்தாலே சமூகமும் நன்றாக மாறும் என்றும், பெண்கள் பயமில்லாமல் வாழும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும் எனவும், அந்த வேகத்தில் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட கூடாது என்பதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த திட்டத்துக்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்பே, அதனை தடுக்கும் பணியில் இந்தப் படை ஈடுபடும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ட்ரோன் முறையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  ஓர் அரசின் நோக்கம் நேர்மையாக இருந்தாலே போதும், அந்த அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை தொடங்கிவைத்து வைத்து முதல்வர் விஜய் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay states that strict action will be taken against crimes against women


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->