மாநிலம் முழுவதும் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக தேர்தல் வாக்குறுதி அளித்த 'மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை' குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுதாவது;

''முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் 17-06-2026 தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 08 அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்தும், அதன்மூலம் நாளொன்றுக்கு 2.05 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர் என்றும், அதில் 64 விழுக்காடு பயணிகளுக்கு கட்டணமின்றி சேவை வழங்கப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் 1,000 நபர்களுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 விழுக்காடு என்கின்ற அளவில் அரசு பேருந்து சேவையானது வழங்கப்பட்டு வருகிறது என்றும் இக்கூட்டத்தில் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இத்துறையின் கீழ் இயங்கும் 8 போக்குவரத்துக் கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநரகத்தின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சரிடம் விவரிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டது.

பயணிகள் நலனுக்காக புதிய மென்பொருள் (Software) உருவாக்கப்பட்டு பேருந்துகளின் புறப்பாடு, வருகை, பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை GPS கருவி மூலம் இணைத்து 24x7 மணி நேரமும் செயல்படும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை முக்கிய பேருந்து நிலையங்களில் அமைத்து, அதனை 8 போக்குவரத்து கழகங்களின் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும், சென்னையில் அமையப்பெறும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைத்து கண்காணிக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறையின் தொலைநோக்குத் திட்டங்களான மகளிர் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முதலமைச்சர், போக்குவரத்துக் கழகங்களால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்க ஸ்மார்ட் கார்டு (Smart Card) முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System திட்ட செயலாக்கம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay held consultations with officials regarding the free bus service for women across the state


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->