'என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப புதுச்சேரி மக்கள் தயார்': முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
Chief Minister MK Stalin states that the people of Puducherry are ready to send the NR Congress and BJP alliance packing
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதியும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் இன்னும் 03 நாட்களில் (09-ஆம் தேதி) நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், திமுக அரசின் சாதனைகளையும் எடுத்து கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, கடந்த மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அடுத்து நெல்லையில் நேற்று முன்தினம் 02-ஆம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
இதனையடுத்து, 03-ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை புதுச்சேரியில் இன்று தொடங்கினார். புதுச்சேரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அங்கு அவர் பேசுகையில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாட்டின் சகோதர மாநிலம் புதுச்சேரி. தமிழ்நாட்டு மக்களிடம் உள்ள உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் உள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தலை இம்முறை மாற்றியுள்ளனர். தேர்தல் தேதியை மாற்றினால் உணர்வை மாற்ற முடியுமா?. தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், 'என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார். புகழ்பெற்ற புதுச்சேரியை பாஜகவும் என்.ஆர்.காங்கிரஸும் என்ன நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்கள்?.' என்று தெரிவித்துள்ளார். அத்துடன், புதுச்சேரியின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர் புதுவை சிவம். அரசியல் மாண்புகளை பாஜக குழிதோண்டி புதைத்து வருகிறது. புதுச்சேரி தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது. டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு தலையாட்டும் கூட்டத்தை புதுச்சேரி மக்களும் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை எட்ன்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு, சட்டமன்றத்திற்கு மரியாதை உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதலமைச்சராக வைத்துள்ளது பாஜக துன்று விமர்சித்துள்ளதோடு, புதுச்சேரியில் ஆல் இன் ஆலாக ஆளுநர்தான் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரிக்கான புதிய விடியல் நாள் ஏப்ரல் 09-ஆம் தேதி, அதற்கு மக்கள் தயாரா?. மக்கள் கட்டளையை நிறைவேற்றும் அரசாக புதுச்சேரி அரசு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், தாய்மொழியை இழந்த இனங்கள், வாழ்ந்ததாக வரலாறு கிடையாது என்றும், புதுச்சேரியில் சி.பி.எஸ்.சி பாடத்தைக் கொண்டு வந்து தாய் மொழி கல்வியை அழித்துள்ளது என்.டி.ஏ. கூட்டணி என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்று கூறினார் பிரதமர் மோடி, இப்போது ஒஸ்ட் புதுச்சேரி ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேப்போல, வில்லியனூரில் ஒரு அமைச்சருக்கு சொந்தமான கிடங்கில் இருந்து பல கோடி மதிப்புள்ள சந்தன எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியை மாற்றியுள்ளது பாஜக - என்.ஆர்.காங். கூட்டணி. தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்து மக்களின் உயிரோடு விளையாடி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி 03 அப்பாவிகள் உயிரிழந்தது எப்படி? புதுச்சேரி அரசின் மெகா ஊழல்தான். புதுச்சேரிக்கு ஒன்றிய அரசால் மாநில அந்தஸ்து வழங்க முடியாதா?. எந்த முகத்தை வைத்துக்கொண்டு புதுச்சேரிக்கு பிரதமர் வாக்கு கேட்டு வருகிறார்?. இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்தித்ததற்கு பிரதமர் மோடியும் அமித் ஷாவும்தான் காரணம் என்று பேசியுள்ளார்.
05 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலை ரங்கசாமி நடத்த நினைத்தாரா? என்றும், தமிழ்நாட்டில் உள்ள பாஜக அடிமை எடப்பாடி பழனிசாமி போலதான் புதுச்சேரியில் ரங்கசாமியும். கூட்டணி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டவர்தான் ரங்கசாமி. பீகாரின் நிதிஷ்குமார் நிலை ரங்கசாமிக்கு வராது என என்ன நிச்சயம்? என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin states that the people of Puducherry are ready to send the NR Congress and BJP alliance packing