தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உயர்மட்ட ஆலோசனை...! - தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு!
Chief Election Commissioner Gyanesh Kumar high level consultation Detailed review Tamil Nadu election preparations
தமிழக அரசியல் வானில் தேர்தல் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை நோக்கி களம் அனல் பறக்கிறது. ஒருபுறம் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை வேட்டையாடி வர, மறுபுறம் இந்த ஜனநாயகத் திருவிழாவை எவ்விதக் குறைபாடின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் போர்க்கால வேகத்தில் களம் இறங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன; வாக்காளர் வரத்தைப் பொறுத்து இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, அனைத்து மையங்களும் தற்போது தேர்தல் ஆணையத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, 3 ஆயிரத்து 22 இடங்களில் அமைந்துள்ள 5 ஆயிரத்து 938 வாக்குச்சாவடிகள் 'பதற்றமானவை' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் அனைத்தும் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன.
மேலும், அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதைத் தடுக்கத் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினர் அங்கே முகாமிட உள்ளனர்.இந்த ஏற்பாடுகளைக் கூர்நோக்கும் வகையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உயர்மட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்று, கள நிலவரங்களை விவரித்து வருகிறார்.
குறிப்பாக, பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், பாதுகாப்பு அரண்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chief Election Commissioner Gyanesh Kumar high level consultation Detailed review Tamil Nadu election preparations