தஞ்சையில் அரிதான வண்ணத்தி நாரைகள் கண்டுபிடிப்பு...! - வலசை காலம் கடந்தும் தோன்றிய அதிசயம்...!
Rare pink storks discovered Thanjavur miracle that appeared despite passage time
தஞ்சாவூரை அடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள வயல்வெளிகளில் அரிதாகக் காணப்படும் வண்ணத்தி நாரை பறவைகள் 6 காணப்பட்டிருப்பது இயற்கை ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவை, பொதுவாக வட இந்தியப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவது வழக்கம்.
சில சமயங்களில் வலசை காலங்களில் தென் இந்தியாவிலும் தோன்றினாலும், வலசை பருவம் முடிந்த பிறகும் தஞ்சை மாவட்டத்தில் இவ்வகை பறவைகள் தோன்றுவது மிகவும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.வண்ணாரப்பேட்டை கிராமத்தை ஒட்டியுள்ள வயல்வெளிகளில் இப்பறவைகள் முதன்முதலில் காணப்பட்டதை, அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்ரீராம் கவனித்து உடனடியாக தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் ஆய்வுக்குழுவினரும் புகைப்படக் கலைஞர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பறவைகளை நேரில் பதிவு செய்து, புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் விளக்கமளிக்கையில், “வண்ணத்தி நாரை என்பது நடுத்தர அளவிலான நீர்நிலப் பறவை.
திறந்த புல்வெளிகள், வயல்வெளிகள், ஆற்றங்கரைகள், குளங்கள் மற்றும் ஈரநிலப் பகுதிகளே இவற்றின் இயல்பான வாழ்விடங்களாகும். இவை மீன்கள், தவளைகள், சிறிய ஊர்வன, புழுக்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டுள்ளன. பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறிய கூட்டங்களாகவோ காணப்படும் இப்பறவைகள், இனப்பெருக்க காலங்களில் உயரமான மரங்களில் கூடு அமைத்து 2 முதல் 4 முட்டைகள் வரை இடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இவ்வகை பறவைகள் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது இவை காணப்பட்டுள்ள பகுதி, அவற்றின் வாழ்விட விரிவாக்கத்தையோ அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களின் தாக்கத்தையோ சுட்டிக்காட்டும் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், இப்பறவைகள் மேலும் எந்த பகுதிகளில் காணப்படுகின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து, ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.அதேநேரத்தில், இவ்வகை அரிதான பறவைகள் வாழும் பகுதிகளை பாதுகாப்பதும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமானதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Rare pink storks discovered Thanjavur miracle that appeared despite passage time