தலைமைச் செயலர் சாய்குமாருக்கு 06 மாத பணி நீட்டிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்..!
Central government approves 6 month extension for Chief Secretary Saikumar
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தலைமைச் செயலர் சாய்குமாருக்கு மேலும் 06 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய பல அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது. அதன்படி, தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம் கடந்த ஏப்ரல் 08-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமார் தற்போது வரை தலைமைச் செயலராக நீடித்து வருகிறார். அவருக்கு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணிக்காலம் இருக்கிறது.

இதற்கிடையே, தலைமைச் செயலர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. அதையேற்று அவருக்கு மேலும் 06 மாதகாலம் (2027 பிப்ரவரி 28 வரை) பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் சாய்குமார் மேலும் 06 மாதங்கள் அதே பொறுப்பில் தொடருவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சாய்குமார் மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகவும், மின்சார வாரியம், பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளில் உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அத்துடன், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் தனிச் செயலராகவும் சாய்குமார் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central government approves 6 month extension for Chief Secretary Saikumar