த.வெ.க - பாஜக கூட்டணி அமையுமா? திமுகவின் அந்த ஆசை நிறைவேறட்டும் - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
BJP Nainar Nagendran say DMK TVK alliance
திருநெல்வேலி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு நாளையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (SIR) எதிராக வருவாய்த் துறை அலுவலர்களைப் போராட்டத்திற்குத் தூண்டிவிட்டது தி.மு.க. அரசுதான் என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், "கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராகவே போராடி வருகிறது. எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த் துறை அலுவலர்களைத் தூண்டிவிட்டது தி.மு.க. அரசுதான். துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர உணவு தேவை; ஆனால் இப்போது மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்."
கூட்டணி மற்றும் அரசியல்
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நடிகர் விஜய் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று பேசியது குறித்த கேள்விக்கு, "அவர்களுடைய ஆசை நிறைவேறட்டும்" என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
மேலும் அவர், கூட்டணி குறித்து ஜனவரியில் பேசி முடிவெடுக்கப்படும் என்றும், கூட்டணியால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்றும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு விமர்சனம்
தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கிராமங்கள்தோறும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். "தி.மு.க. அரசு தன் மக்களைவிடத் தமிழக மக்களைவிடத் தன் மக்களே முக்கியம் என்று உள்ளது. துணை முதல்வர் உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காகத் தி.மு.க. முயற்சி செய்து கொண்டிருக்கிறது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
English Summary
BJP Nainar Nagendran say DMK TVK alliance