“டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம்: தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை நாசமாகிவிட்டது: பாஜக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்..!
BJP leader Nagendran condemned the teachers intoxicated condition and sexual harassment as evidence that Tamil Nadu school education sector has collapsed
''தி.மு.க.,வின் நான்காண்டு கால ஆட்சியில் பள்ளிகளில் ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது எல்லாம் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது.
-9ckrc.png)
பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்?
பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள்.
இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் “பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை” என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் மகேஷ். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்!
இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும் தி.மு.க., அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டசபைத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்! என்று நயினார் நாகேந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர். திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினோ, இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார். உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதல்வரே ? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என்று அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP leader Nagendran condemned the teachers intoxicated condition and sexual harassment as evidence that Tamil Nadu school education sector has collapsed