நாச்சியப்பன் கடையில் திமுகவின் பெயரைப் பொறித்து இனி மக்களை ஏமாற்ற முடியாது - CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!
BJP Annamalai reply to CM Stalin PMMSY issue
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான் என, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, "இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.
உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள்.
கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai reply to CM Stalin PMMSY issue