பியூஷ் கோயலிடம் அண்ணாமலை கேட்ட தொகுதி? அதிர்ச்சியில் அதிமுக! அண்ணாமலை போடும் அரசியல் கணக்கு!
Annamalai asked Piyush Goyal for a constituency AIADMK in shock Annamalai is making a political calculation
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தனது தேர்தல் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாஜக நிர்வாகி அண்ணாமலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை கூடுதலாக 7 தொகுதிகள் கிடைத்துள்ளதால், பாஜக சார்பில் போட்டியிட பல மூத்த நிர்வாகிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர் தேர்வு தொடர்பாக மத்திய தலைமையுடன் பலரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அண்ணாமலை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார். தகவல்களின் படி, கோவையில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அண்ணாமலை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததும், அதிமுக–பாஜக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நடைபெற்றபோதும் அவர் பங்கேற்காததும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அவர், அங்கு போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரவாளர்கள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, “ஒரு மாதத்தில் தொகுதியில் பணியாற்றி வெற்றி பெற முடியுமா?” என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பியிருந்தார். அதனால் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
ஆனால் தற்போது பியூஷ் கோயலை சந்தித்து குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அண்ணாமலை இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கிறார் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளர் இளங்கோவிடம் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் இந்த முறை தனது சொந்த செல்வாக்கு அதிகமாக இருக்கும் கோவை மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக தரப்பில் பாஜகவுக்கு கோவை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏற்கனவே பல்லடம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அண்ணாமலை எந்த தொகுதியில் களம் இறங்குவார் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
English Summary
Annamalai asked Piyush Goyal for a constituency AIADMK in shock Annamalai is making a political calculation