பியூஷ் கோயலிடம் இருந்து அவசர அழைப்பு; புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்த அண்ணாமலை; நடந்து என்ன..?
Annamalai Arrives in Chennai by Helicopter from Puducherry Following Urgent Call from Piyush Goyal
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 09ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக ஆகியவை அடங்கிய என்.டி.ஏ. கூட்டணியும், காங்கிரஸ் – திமுக அடங்கிய கூட்டணியும் களத்தில் உள்ளன. அத்துடன், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெகவும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் போட்டியிடும் ராஜ்பவன் தொகுதியில் இன்று அவருக்கு வாக்கு சேகரித்து அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில், அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பாத்துள்ளனர். இதனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பாஜகவுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இன்னும் இரண்டு தினங்களில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் புதுச்சேரியில் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அண்ணாமலைக்கு சென்னை வரச் சொல்லி பியூஷ் கோயலிடம் இருந்து அவசர அழைப்பு சென்றுள்ளது. இதன் காரணமாக திடீரென அவர் புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
அதாவது, சென்னையில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் அண்ணாமலையை பங்கேற்க சொல்லி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்ததாகவும், அதன் பேரிலேயே அவர் உடனடியாக சென்னை வந்ததாக தகவல் சொல்லப்படுகிறது. பியூஷ் கோயலிடம் இருந்து அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு, அண்ணாமலை உடனடியாக சென்னை வந்திருப்பதும், பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்பதும் தமிழ்நாடு அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Annamalai Arrives in Chennai by Helicopter from Puducherry Following Urgent Call from Piyush Goyal