#BiGBreaking: முதல்வரை சந்தித்த பின்., அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.!
AMR PRESS MEET AFTER CM MEET
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையின் 6 நுழைவாயில்களிலும் சுமார் 5000 போலீசார் பாமகவினரை சென்னையினுள் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அன்புமணி இராமதாஸை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 1989ல் இருந்து இன்றுவரை எந்தெந்த சமுதாயங்களுக்கு எத்தனை இடங்களில் அவர்கள் இட ஒதுக்கீடு விதமாக கடைப்பிடித்தார் என்று அதை அவர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை, நாங்கள் தமிழக முதல்வரிடம் கொடுத்தோம்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்பாக எங்களுடைய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு குழுவாக நேரில் சந்தித்து மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு எங்கள் கட்சியினுடைய பொதுக்குழு கூடி, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றி, அதனை அரசுக்கு தெரியப்படுத்தினோம். 10 நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் கூட்டாக நடத்திய பொதுக் குழுவில், வன்னியர் இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டங்களை அறவழியில் நடத்துவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
அந்த வகையில் இன்று சென்னையில் இன்று அறவழியில் போராட்டத்தை நடத்தினோம். இந்த போராட்டம் யாருக்கும் எதிரானது இல்லை. தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு வன்னியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். குடிசையில் வசித்து வருகிறார்கள். கொத்தனாராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு மிகவும் பின்தங்கிய சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. இந்த சமுதாயம் வாழ்கின்ற பகுதியில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை. கல்வியைப் பொருத்தவரை மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் 7 மாவட்டம் வன்னியர்கள் வாழும் வட மாவட்டங்கள் உள்ளன. இந்த வன்னியர் சமூகம் முன்னேறினால் மட்டும்தான் தமிழகம் முன்னேறும்.
இது ஒரு வளர்ச்சி பிரச்சனை என்பதால் இது குறித்து தமிழகம் முதலிடம் விளக்கியுள்ளோம். தமிழக முதல்வரும் இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு, விரைவில் நல்ல ஒரு முடிவை எடுப்பேன். அதனை விரைவில் அறிவிப்பேன் என்று உறுதி கொடுத்திருக்கின்றார்." என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்கள் வன்னிய சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக சித்தரிக்க வேண்டாம். தமிழகத்தில் அவர்கள் தான் பின்தங்கிய சமுதாயம்.. யாரோ செய்ததற்கு அந்த சமுதாயத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
AMR PRESS MEET AFTER CM MEET