அதிமுகவின் அடிமடியில் கைவைக்கும் அமித் ஷா! ஆமை வேகத்தில் நகரும் என்டிஏ கூட்டணி? எடப்பாடி கோபத்துக்கு என்ன காரணம்?
Amit Shah is putting his hand on the AIADMK lap NDA alliance moving at a snail pace What is the reason for Edappadi anger
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் (என்டிஏ) தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி விரிவாக்கம் தொடர்பான உள்நிலை விவாதங்கள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் மேலும் புதிய கட்சிகளை இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் விருப்பம், அதிமுக தலைமையிடத்தில் ஒரு அளவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலாக, ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை பாஜக மேலிடம் வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே தற்போது கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல சிறிய கட்சிகள் இணைந்திருந்தன. அப்போது அதிமுக 179 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டாலும், கூட்டணியில் இருந்த சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால், மொத்தமாக 191 தொகுதிகளில் அந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. பாமக மற்றும் பாஜக மட்டும் தங்களது சொந்த சின்னங்களில் போட்டியிட்டன. இந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு, இம்முறை அதிமுகவுக்கான தொகுதி எண்ணிக்கை குறையக்கூடாது என்பதில் கட்சி தலைமையகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
தற்போதைய கணக்குப்படி, என்டிஏ கூட்டணியில் அதிமுகக்கு 165 முதல் 170 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, அதிமுகவுக்கு 10 முதல் 15 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் சூழலை உருவாக்குகிறது. இந்நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் இணைந்திருப்பதும், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதும், அதிமுகவின் கவலையை அதிகரித்துள்ளது.
மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், தங்களுக்கான தொகுதி எண்ணிக்கை இன்னும் குறையும் அபாயம் இருப்பதாக அதிமுக தலைமை கருதுகிறது. இதனால்தான், “கூட்டணி பேச்சுகள் இத்துடன் முடிவடைய வேண்டும்; இனி புதிய கட்சிகளுக்கு இடமில்லை” என்ற நிலைப்பாட்டை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி கதவை மூடிவிட்டு, அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதே அதிமுகவின் விருப்பம்.
ஆனால் பாஜக தலைமையின் அணுகுமுறை சற்றே மாறுபட்டதாக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக இருப்பதாகவும், தற்போதைய என்டிஏ கூட்டணியின் பலம் போதுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், சமூக ஆதரவு கொண்ட கட்சிகள் அல்லது பிராந்திய செல்வாக்கு உள்ள அமைப்புகள் இன்னும் இணைந்தால், தேர்தல் களத்தில் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற கணக்கில் பாஜக உள்ளது.
இந்த இருவேறு அணுகுமுறைகளால், “கூட்டணி கதவை மூடலாமா, அல்லது இன்னும் திறந்தே வைக்கலாமா?” என்ற கேள்வி, தற்போது என்டிஏ கூட்டணிக்குள் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அதிமுக விரைவில் தொகுதி பங்கீட்டை முடித்து தேர்தல் பணிகளை தொடங்க விரும்பும் நிலையில், பாஜக இன்னும் சில அரசியல் வாய்ப்புகளை ஆராய்ந்து, சூழலை கவனித்து முடிவெடுக்க விரும்புகிறது. இதன் முடிவு, 2026 தேர்தலை நோக்கிய என்டிஏ கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையக்கூடும்.
English Summary
Amit Shah is putting his hand on the AIADMK lap NDA alliance moving at a snail pace What is the reason for Edappadi anger