மக்கள் தொகை கணக்கெடுப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை: அமித்ஷா அறிவிப்பு..!
Amit Shah announced that the official announcement regarding the Population Census will be made tomorrow
'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011-இல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021-இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. அத்துடன், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி குறித்து மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் அவர் கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதனால், தாமதமின்றி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அத்துடன், ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அது அவசியம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 01-இல் தொடங்கப்படும் என கடந்த 04-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை, வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 01-ஆம் தேதியே கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்றும், நாட்டின் மற்ற மாநிலங்களில் 2027, மார்ச் 01-இல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: ''16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Amit Shah announced that the official announcement regarding the Population Census will be made tomorrow