பதவிக்காக கூட்டணியா...? எங்களை துரோகி ஆக்காதீங்க...! - சீறும் திருமாவளவன்
Alliance for power Dont make us traitors Thirumavalavan
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, அரசின் செயல்பாடுகள், தி.மு.க.வினரின் விமர்சனங்கள், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது,"தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான். இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதிகாரிகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
எனவே, அதிகாரிகள் கள நிலவரத்தை முழுமையாக அறிந்து, உண்மையான தகவல்களை அமைச்சர்களிடம் தெரிவிக்க வேண்டும்.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுவது தவறான செயல்.
அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.விசிக துரோகம் செய்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க தி.மு.க.வினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதேபோல், பதவிக்காகவே விசிக கூட்டணி மாறியதாக தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் ஏற்புடையவை அல்ல.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை விரைவில் சீராக வேண்டும். அவர் முழுமையான உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.
பேருந்துகளுக்கு தவெக கட்சிக் கொடியின் நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல. அரசு போக்குவரத்து வாகனங்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது.இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
English Summary
Alliance for power Dont make us traitors Thirumavalavan