கௌரவர்கள் சூழ்ச்சி செய்தாலும் பாண்டவர்களுக்கு தான் வெற்றி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து..!!
AIADMK Jayakumar opined Supreme Court verdict is welcome
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அப்பொழுது பேசிய அவர் "அதிமுக பொது குழு செல்லும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் படி ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இந்த தீர்ப்பை தமிழக முழுவதும் உள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டனும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்களா கௌரவர்களா என்று போட்டியில் கௌரவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. பாண்டவர்களுக்கு தான் எப்பொழுதுமே இறுதி வெற்றி.
அந்த வகையில் தான் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. கௌரவர்கள் எவ்வளவுதான் சூழ்ச்சி செய்தாலும் சரி எவ்வளவு தான் வஞ்சகம் செய்தாலும் சரி இறுதி வெற்றி என்பது எப்பொழுதும் பாண்டவர்களுக்கு தான். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
English Summary
AIADMK Jayakumar opined Supreme Court verdict is welcome