அ.தி.மு.க. பொதுக்குழு! ஐந்து ஆயிரம் உறுப்பினர்கள் கூடும் பிரமாண்ட அரங்கில் தீர்வு காணப்போகும் முக்கிய அரசியல் முடிவுகள்...!
AIADMK General Committee Important political decisions decided grand hall where five thousand members gather
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வில் அரசியல் வெப்பம் உச்சத்தைத் தொடந்துள்ளது. வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில், கட்சியின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான பொதுக்குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெறும் இந்த பொதுக்குழுவிற்கு, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அரசியல் உரை ஆற்றவுள்ளதால், கூட்டம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. மூவாயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் ஐயாயிரம் பேர் ஒன்று கூடும் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக இது அமைகிறது.

கூட்டணிக்குள் பதற்றம் – எடப்பாடி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார்?
வரவிருக்கும் தேர்தலுக்காக அ.தி.மு.க., ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதோடு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வமும் காணப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வைக் கொள்கை எதிரி என கருதும் வெற்றிக் கழகம் இது குறித்து விருப்பமில்லை என்பது தெளிவாகியுள்ளது.
அதேபோல பா.ஜ.க. நீண்டகாலமாக வலியுறுத்திவரும் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. பிரிவுகளை ஒன்றிணைப்பது குறித்து பொதுக்குழு முடிவு எடுக்குமா?
என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடியின் சக்தி வெளிப்பாடு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை மறுபடியும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி அதிரடியாக நீக்கியது பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. பின்னர் செங்கோட்டையன் விஜய் வெற்றிக் கழகத்துக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில், தனது ஆதிக்கத்தைக் காட்டுவதற்காக, செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்தியபிரமாண்ட கூட்டம், அவருடைய தரப்பின் பலத்தை வெளிப்படையாக நிரூபித்தது.
OPS கெடு பொதுக்குழுவில் பதில் வருமா?
இதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார். அவர் முன்பு எடப்பாடிக்கு,
“டிசம்பர் 18க்குள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுத்தாக வேண்டும்”
என்று கெடு விதித்திருந்தார்.அதனால், இந்த பொதுக்குழுவில் அவரை மீண்டும் சேர்க்கும் விவகாரமும் மேடையேறும் என்ற எதிர்பார்ப்பு OPS ஆதரவாளர்களிடையே மிக அதிகமாக உள்ளது.
முழு கவனமும் நாளைய பொதுக்குழு மீது, என்ன வெடிக்கப் போகிறது?
பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தும் “ஒற்றை அ.தி.மு.க.” கோரிக்கைக்குப் பழனிசாமி இணங்குவாரா? OPS-க்கு வாய்ப்பு தரப்படுமா?விஜய் வெற்றிக் கழகம் நோக்கி எந்த சைகை செல்லும்?பா.ஜ.க. கூட்டணியின் திசை என்ன? இந்த எல்லா கேள்விகளும் மத்தியில், அதிக வசீகரம் மிக்க அரசியல் சூழலில், அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது.
English Summary
AIADMK General Committee Important political decisions decided grand hall where five thousand members gather